மேற்கு வங்கத்தில் மாதம்தோறும் பெண்களுக்கு ரூ.3,000 உதவித்தொகை வழங்கும் திட்டம் ஒப்புதல்: தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியது பாஜ அரசு

 

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000 உதவித்தொகை வழங்கும் அன்னபூர்ணா திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேற்குவங்கத்தில் கடந்த மாதம் 23,29 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. பாஜ வெற்றி பெற்று சுவேந்து அதிகாரி முதல்வராக பதவி ஏற்றார். தேர்தலுக்கு முன்பாக பாஜ வௌியிட்ட தேர்தல அறிக்கையில், 6 மாதங்களில் பொது சிவில் சட்டம் அமல், மகளிருக்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை, பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தது.

பாஜ அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் பணிகள் நடந்து வருகின்றன. அதன்படி, “வரும் ஜூன் 1ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்” என்ற அறிவிப்பை கடந்த 12ம் தேதி முதல்வர் சுவேந்து அதிகாரி வௌியிட்டார். இந்நிலையில் மாதம்தோறும் மகளிருக்கு ரூ.3,000 உதவித்தொகை வழங்கும் அன்னபூர்ணா திட்டத்துக்கு மேற்குவங்க பேரவை நேற்று ஒப்புதல் வழங்கியது. பேரவை கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மாநில அமைச்சர் அக்னிமித்ரா, “வரும் ஜூன் 1ம் தேதி முதல் பெண்களுக்கு ரூ.3,000 உதவித்தொகை அளிக்கும் அன்னபூர்ணா திட்டத்துக்கு அமைச்சரவையில் ஒப்புதல அளிக்கப்பட்டுள்ளது.

பொது சிவில் சட்டத்தின்கீழ் குடியுரிமைக்கு விண்ணப்பித்த மற்றும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்காக தீர்ப்பாயங்களை அணுகிய பெண்களும் இந்த திட்டத்தின் பலன்களை பெற முடியும். மேலும், ஜூன் 1 முதல் அரசு பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயண திட்டத்துக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

மத அடிப்படையிலான உதவிகள் நிறுத்தம்
மேற்குவங்கத்தில் இமாம்கள் மற்றும் பிற மதத் தலைவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மத அடிப்படையிலான உதவிகளை நிறுத்துவது, திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நடந்த ஊழல் வழக்குகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க இரண்டு குழுக்களை அமைப்பது என முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையிலான அமைச்சரவை தீர்மானித்தது.

மேலும், மாநிலத்தின் தற்போதைய இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை ரத்து செய்தல், மாநில அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தி நிர்ணயிக்க ஏழாவது மாநில ஊதியக் குழுவை அமைத்தல் ஆகியவற்றுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த முடிவால் மேற்குவங்கத்தில் பதிவு செய்யப்பட்ட மசூதிகளின் இமாம்களுக்கு மாதம் ரூ. 3,000-ம், புரோகிதர்களுக்கு மாதம் ரூ. 2,000ம் உதவித்தொகையாக வழங்கப்பட்டு வந்தது நிறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: