சாசாராம்: பீகாரில் பாட்னா செல்ல வேண்டிய பயணிகள் ரயிலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒரு பெட்டி முழுவதுமாக எரிந்து சேதமானது. பீகார் மாநிலம் சாசாராம் ரயில் நிலையத்தின் 6வது பிளாட்பாரத்தில் இருந்து பாட்னா நோக்கிச் செல்ல வேண்டிய விரைவு பயணிகள் ரயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. நேற்று காலை 6 மணிக்கு ரயில் கிளம்ப வேண்டிய நிலையில், மின் கசிவு காரணமாக திடீரென ஒரு பெட்டியில் கரும்புகை வெளியேறி தீ மளமளவென பரவியது. இதனால் பிளாட்பாரத்தில் இருந்த பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்து அங்குமிங்கும் ஓடினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். இந்த விபத்தில் ரயிலின் ஒரு பெட்டி முழுவதுமாக எரிந்து சாம்பலான நிலையில், அதிர்ஷ்டவசமாக உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை. தற்போது சேதமடைந்த பெட்டியை ரயிலில் இருந்து அகற்றிவிட்டு, முறையான சோதனைக்குப் பிறகு ரயிலை மீண்டும் இயக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
