புதுடெல்லி: லிட்டருக்கு ரூ.3 உயர்த்தினாலும் பெட்ரோல், டீசல் விலையால் தினசரி ரூ.750 கோடி இழப்பு ஏற்பட்டு வருவதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. ஈரான் போரால் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து உள்ளது. இதனால் தினசரி பெட்ரோல், டீசல் விற்பனையில் சுமார் ரூ.1,000 கோடி இழப்பு ஏற்பட்டது. 5 மாநில தேர்தலுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டது. இதனால் இழப்பு தினமும் ரூ.750 கோடியாகக் குறைந்துள்ளது என்று பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜாதா சர்மா தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில்,’ பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவை உற்பத்திச் செலவை விடக் குறைந்த விலைக்கு விற்பதால் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்புகளை ஈடுகட்ட, அரசு மானியம் வடிவிலான நிவாரணத் தொகுப்புத் திட்டம் தற்போதைக்குக் பரிசீலனையில் இல்லை. ஒரு காலாண்டில் ஏற்பட்ட மொத்த இழப்பு ரூ.1 லட்சம் கோடியாக உயர்ந்தது. இது அந்நிறுவனங்களின் ஓராண்டு முழு வருவாயையும் முழுமையாக விழுங்கிவிடும் அளவுக்குப் பெரிய தொகையாகும். தற்போதும் தினசரி ரூ.750 கோடி அளவிலான இழப்பு தொடர்ந்து நீடிக்கிறது’ என்றார்.
