ஆண்டிபட்டி, மார்ச் 2: ஆண்டிபட்டி பகுதியில் வைகை கரையோர கிராமங்களில் நெல் அறுவடை தீவிரமாக நடந்து வருகிறது. விளைச்சல் அமோகமாக இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான குன்னூர், அம்மச்சியாபுரம், டி.அணைக்கரைப்பட்டி, தர்மத்துப்பட்டி, மூனாண்டிபட்டி புதூர், புள்ளிமான் கோம்பை உள்ளிட்ட வைகை ஆற்றங்கரையோர கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயம் நடந்து வருகிறது. இப்பகுதியில் காய்கறி சாகுபடி அதிகமாக நடக்கும். இந்நிலையில், கடந்தாண்டு நன்றாக மழை பெய்ததால் நூற்றுக்கணக்கான ஏக்கரில் நெல் பயிரிட்டனர்.