லக்னோ: உத்தரபிரதேசத்தின் பல மாவட்டங்களில் வீசிய பலத்த புயல் மற்றும் கனமழை காரணமாக மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன, சுமார் 113 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உத்தரப்பிரதேசத்தின் பல மாவட்டங்களில் நேற்று திடீரென கோடை மழை பெய்தது. இடிமின்னலுடன் கூடிய கன மழையால் பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. புயல்காற்றுடன் பெய்த மழையினால் பல இடங்களில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. பல இடங்களில் வீடுகள் மற்றும் கட்டிடங்களின் சுவர்கள் இடிந்து விழுந்தது. இந்த சம்பவங்களில் மொத்தம் 113 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 53 பேர் காயமடைந்துள்ளனர். 114 கால்நடைகள் பலியாகி உள்ளது. மொத்தம் 87 வீடுகள் சேதமடைந்ததாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.
புயல்,மழை மற்றும் மின்னல் ஆகியவற்றால் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் மற்றும் சேதங்களை கவனத்தில் கொண்ட முதல்வர் யோகி ஆதித்யநாத் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் நிவாரண உதவிகள் சென்றடைவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். பிரயாக்ராஜில் 21 பேரும், பதோஹியில் 16பேரம், பதேபூரில் 9 பேரும், பதாயூனில் 5 பேரும், பிரதாப்கரில் 4 பேரும், சந்தவுலி மற்றும் குஷிநகரில் தலா இரண்டு பேரும், சோன்பத்ரா மாவட்டத்தில் ஒருவரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 50 அடி உயரத்துக்கு தூக்கி வீசப்பட்ட நபர்: உத்தரப்பிரதேசத்தின் பெரேலி மாவட்டத்தின் பமியாான கிராமத்தில் கடும் புயலின்போது நன்ஹே மியான் என்பவர் தகரக் கூரையுடன் சேர்த்து சுமார் 50அடி உயரத்திற்கு தூக்கி வீசப்பட்டுள்ளார். அவர் அருகில் உள்ள வயல்வெளியில் விழுந்து பலத்த காயமடைந்தார். சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோவில் அந்த நபர் தகரக்கூரையை பற்றிக்கொண்டிருக்கும் நிலையிலேயே காற்றில் தூக்கி வீசப்படுவது தெரிகின்றது.
