திருவனந்தபுரம்: வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. இதை முன்னிட்டு தரிசனத்திற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் வைகாசி மாத பூஜைகள் இன்று தொடங்குகின்றன. இதை முன்னிட்டு நேற்று மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரர் மகேஷ் மோகனர் முன்னிலையில் மேல்சாந்தி பிரசாத் நடை திறந்தார். நேற்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு மாத பூஜைகள் தொடங்கும். இன்று முதல் வரும் 19ம் தேதி வரை கணபதிஹோமம், உஷபூஜை உள்பட வழக்கமான பூஜைகளும், படிபூஜை, உதயாஸ்தமன பூஜை உள்பட சிறப்பு பூஜைகளும் நடைபெறும். இந்த நாட்களில் தினமும் நெய்யபிஷேகமும் நடைபெறும்.
வரும் 19ம் தேதி இரவு 10 மணிக்கு சபரிமலை கோயில் நடை சாத்தப்படும். அன்றுடன் வைகாசி மாத பூஜைகள் நிறைவடையும். பிரதிஷ்டை தின பூஜைகளுக்காக வரும் 25ம் தேதி மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும்.நேற்று நடை திறப்பை முன்னிட்டு தரிசனத்திற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். தரிசனத்திற்கு பக்தர்கள் www.sabarimalaonline.org என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
