பேரறிவாளனின் வழக்கறிஞர் பதிவை நிறுத்திவைக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு: பார் கவுன்சில் பதில்தர உத்தரவு

 

 

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட பேரறிவாளனின் வழக்கறிஞர் பதிவை நிறுத்திவைக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் 24ம் தேதி அவர் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்துள்ளார். அவரை வழக்கறிஞராக பதிவுசெய்ததை சட்டவிரோதம் என்று அறிவிக்கக் கோரி காங்கிரஸ் எம்.பி.ஆர்.சுதா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது மனுவில், கருணை மனுவை பரிசீலிக்க தாமதமானதால் மட்டுமே பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுள்ளாரே தவிர குற்றவாளி என்ற தீர்ப்பு நீக்கப்படவில்லை. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு தேர்தல் நடத்தப்பட்டு ஏப்ரல் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை துவங்கிய நிலையில் அவசர அவசரமாக ஏப்ரல் 24ம் தேதி பார் கவுன்சிலில் வழக்கறிஞர்கள் பதிவு நடத்தப்பட்டுள்ளது.

பேரறிவாளன், திடீரென உணர்ச்சி வசப்பட்டு நடந்த குற்றத்தில் சம்பந்தபபட்டவர் அல்ல. முன்னாள் பிரதமர் ராஜீவ் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சம்பந்தபபட்டவர். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய விடுதலைப் புலிகள் அமைப்பு இன்றும் தடைசெய்யப்பட்ட அமைப்பாகவே உள்ளது. எனவே, வழக்கறிஞராக பேரறிவாளனை பதிவு செய்தது சட்டவிரோதமானது என்று அறிவிக்க வேண்டும். மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு விடுதலையான இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வழக்கறிஞராக பதிவு செய்ய அனுமதிக்கும் வழக்கறிஞர் சட்டப் பிரிவை சட்டவிரோதமானது என்று அறிவிக்க வேண்டும். பேரறிவாளன் வழக்கறிஞராக பதிவு செய்த முறை குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எல்.விக்டோரியா கௌரி, என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, பேரறிவாளனின் வழக்கறிஞர் பதிவை நிறுத்திவைக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதைக்கேட்ட நீதிபதிகள், எதிர்மனுதாரர்களின் வாதத்தை கேட்காமல் எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. இந்த வழக்கில் இந்திய பார் கவுன்சில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஜூன் 9ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

 

Related Stories: