ரோம்: இத்தாலியன் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் 2வது சுற்றுப் போட்டியில் நேற்று, உலகின் நம்பர் 1 வீராங்கனை அரீனா சபலென்கா அபார வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டிகள் ரோம் நகரில் கடந்த ஏப்ரல் 28ம் தேதி துவங்கி நடந்து வருகின்றன. நேற்று நடந்த 2வது சுற்று மகளிர் ஒற்றையர் போட்டியில் பெலாரசை சேர்ந்த உலகின் முதல் நிலை வீராங்கனை அரீனா சபலென்கா, செக் வீராங்கனை பார்போரா கிரெஜ்கிகோவா உடன் மோதினார்.
துவக்கம் முதல் துடிப்புடன் ஆடி ஆதிக்கம் செலுத்திய சபலென்கா முதல் செட்டை, 6-2 என்ற புள்ளிக்கணக்கில் எளிதில் வசப்படுத்தினார். தொடர்ந்து நடந்த 2வது செட்டிலும் சிறப்பாக ஆடிய அவர் அந்த செட்டையும், 6-3 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றினார். அதனால், 2-0 என்ற நேர் செட்களில் வெற்றி வாகை சூடிய அவர் 3வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் அமெரிக்க வீராங்கனைகள் மெக்கார்ட்னி கெஸ்லர், இவா ஜோவிச் மோதினர். இப்போட்டியில் இரு வீராங்கனைகளுக்கும் அட்டகாச ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிகளை குவித்தனர். அதனால், இரு செட்களும் டைபிரேக்கர் வரை நீடித்தன. அந்த இரு செட்களையும், இவா ஜோவிச் சாதுரியமாக ஆடி, 7-6 (7-5), 7-6 (7-4) என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றினார். அதனால், 2-0 என்ற நேர் செட்களில் வெற்றி வாகை சூடிய அவர் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.
