ரோம்: இத்தாலியன் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் முதலாவது சுற்றுப் போட்டியில் நேற்று, லாத்வியா வீராங்கனை யெலனா ஒஸ்டபென்கோ, ஜெர்மனி வீராங்கனை டாட்ஜனா மரியா அபார வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர். இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டிகள் ரோம் நகரில் நடந்து வருகின்றன. நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் முதலாவது சுற்றுப் போட்டியில் இத்தாலி வீராங்கனை லுக்ரீஸியா ஸ்டெபானினி, லாத்வியா நாட்டு வீராங்கனை யெலனா ஒஸ்டபென்கோ மோதினர். துவக்கம் முதல் அட்டகாசமாக ஆடிய யெலனா, முதல் செட்டில் ஒரு புள்ளி கூட விட்டுத்தராமல் 6-0 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வென்றார். தொடர்ந்து நடந்த 2வது செட்டில் ஒரு புள்ளியை மட்டுமே லுக்ரீஸியாவால் பெற முடிந்தது. அந்த செட்டை 6-1 என்ற புள்ளிக்கணக்கில் யெலனா கைப்பற்றினார்.
அதையடுத்து, 2-0 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்ற யெலனா, 2வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் ஜெர்மனி வீராங்கனை டாட்ஜனா மரியா, போலந்து வீராங்கனை மேக்தா லினெட் மோதினர். அப்போட்டியின் முதல் செட்டில் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்திய மரியா, ஒரு புள்ளி கூட விட்டுக் கொடுக்காமல் 6-0 என்ற புள்ளிக் கணக்கில் அந்த செட்டை கைப்பற்றினார். தொடர்ந்து நடந்த 2வது செட்டிலும் சிறப்பாக ஆடிய மரியா, 6-3 என்ற புள்ளிக்கணக்கில் வென்றார். அதனால், 2-0 என்ற நேர் செட்களில் வாகை சூடிய அவர் 2வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
