மதுரை: கோணப்பட்டி மலையில் முருகன் சிலையை நிறுவ அனுமதித்த ஐகோர்ட் கிளை, திண்டுக்கல் கலெக்டரின் உத்தரவை ரத்து செய்தது. திண்டுக்கல் மாவட்டம், கோணப்பட்டியைச் சேர்ந்த செந்தில்குமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘கோணப்பட்டி மலையில் உள்ள ஜோதிமுருகன் கோயிலில் இந்தாண்டு தைப்பூசத் திருவிழாவின் போது பூஜை, அன்னதானம் நடத்தும் திட்டத்துடன் கிராம மக்கள் கடந்த ஜன.20ல் சென்றனர். அப்போது போலீசாரும், வருவாய்த்துறை அதிகாரிகளும் கோயிலில் இருந்த முருகன் சிலையை எடுத்துச் சென்றது தெரியவந்தது. கோயில் வழிபாட்டு நடவடிக்கையில் தலையிட அதிகாரிகளுக்கு உரிமையில்லை. எனவே, கோயிலில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட முருகன் சிலையை மீண்டும் வைக்குமாறு உத்தரவிட வேண்டும்’ என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி எஸ்.மதி முன் விசாரணைக்கு வந்தது.
கூடுதல் அட்வகேட் ஜெனரல் அஜ்மல்கான் ஆஜராகி, ‘‘கோணப்பட்டி மலை உச்சியில் 3 அடி உயர முருகன் சிலையை அனுமதியில்லாமல் வைத்துள்ளனர். இங்குள்ள கோயில் பழமையானது அல்ல. சிலை வைக்கப்பட்டதால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இதனால், கலெக்டர் உத்தரவின் பேரில் சிலை அகற்றப்பட்டது’’ என்றார்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
தமிழ்நாட்டில் பெரும்பாலான கோயில்கள் அரசு புறம்போக்கு நிலங்களில் தான் உள்ளன. அரசு புறம்போக்கு என வகைப்படுத்தப்பட்ட மலைக்குன்றில் அய்யனார் கோயில் இருப்பதும், அந்தக் குன்றில் வேல் நிறுவப்பட்டு கிராம மக்கள் வழிபடுவதாகவும் கலெக்டர் பிறப்பித்த உத்தரவில் உள்ளது. வேல் இருக்கும் இடத்தில் முருகனின் சிலையை நிறுவுவதில் எந்தத் தவறும் இல்லை. கரடுமுரடான பாதை, பாதுகாப்பு இல்லை. எனவே, சிலை அமைக்க அனுமதி வழங்க முடியாது என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
பழநி முருகன் கோயிலில் முன்பு கரடுமுரடான பாதை தான் இருந்தது. பின்னர் மலையில் ஏறுவதற்காக படிகள் கட்டப்பட்டன. கிராமத்தில் பல்வேறு சமூக மக்கள் வசித்து வருகின்றனர். எனவே, முருகன் சிலையை நிறுவினால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என கூறுவது வேதனை அளிக்கிறது. இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. எனவே, சிலையை நிறுவ அனுமதி மறுத்த கலெக்டரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. கோயிலில் இருந்த சிலையை மனுதாரரிடம் ஒப்படைக்க வேண்டும். அவர் சிலையை குறிப்பிட்ட இடத்தில் நிறுவ வேண்டும். பக்தர்கள் திருவிழாக்களை நடத்திக்கொள்ளலாம். இவ்வாறு கூறியுள்ளார்.
