சென்னை: அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 5 வயது பூர்த்தி அடைந்த மற்றும் பள்ளி வயது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேக்க ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 1ம் தேதி முதல் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்படி, 2026-27ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைப் பணிகளை, ஒவ்வொரு பள்ளியிலும் கடந்த மார்ச் 1ம் தேதி முதல் தொடங்க மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் மூலம் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.
அங்கன்வாடி மையங்களில் முன்பருவக் கல்வியை நிறைவு செய்யும் 5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளை அந்தந்த குடியிருப்புப் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும். அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சேர விரும்பும் குழந்தைகள் 1ம் வகுப்பு அல்லது பிற வகுப்புகளுக்கு சேர விரும்பினாலும் சேர்க்க வேண்டும். அரசுப் பள்ளிகளின் பல்வேறு நலத்திட்டங்கள், திறன் வகுப்பறைகள், உயர் தொழில்நுட்பக் கணினி ஆய்வகங்கள், டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான கம்ப்யூட்டர் சார் அடிப்படை அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவை அறிமுகப்படுத்தும் TN-SPARK திட்டம் என மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பல்வேறு கல்வித் திட்டம் குறித்தும், உதவித் தொகைகள் போன்றவை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
அரசுப் பள்ளிகளில் கடந்த ஆண்டை விட குறைந்தபட்சம் 50 மாணவர்களை கூடுதலாக சேர்க்கை செய்யும் அரசுப் பள்ளிகளுக்கு தமிழ்நாடு அரசால் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றது. அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை ஊக்குவித்து 2026-27ம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் கணிசமான அளவில் மாணவர்கள் சேர்க்கை விகிதத்தினை அதிகரிக்க வேண்டும் என்று கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 2026-27ம் கல்வியாண்டிற்கு 1ம் வகுப்பில் 97,737 மாணவர்களும், இரண்டு முதல் 8ம் வகுப்புகளில் 8,178 மாணவர்களும், மழலையர் வகுப்புகளில் 6,796 மாணவர்களும் என மொத்தம் 1,12,711 மாணவர்கள் தமிழ்நாடு மாநிலம் முழுவதும் நேற்று மாலை 4 மணி வரை மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
