தமிழக தலைமை செயலாளராக சாய்குமாரை நியமித்ததை எதிர்த்த வழக்கு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழக தலைமை செயலாளராக சாய்குமாரை நியமித்த தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த வீராசாமி என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழக சட்டமன்ற தேர்தல் நடைமுறைகள் முன்னேற்றத்தில் இருந்த சூழலில் ஏப்ரல் 8ம் தேதி தமிழக தலைமை செயலாளராக இருந்த முருக்கானந்தத்தை மாற்றிவிட்டு அந்த பதவிக்கு சாய்குமாரை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவிவகித்த காலத்தில் அவரின் செயலாளராக சாய்குமார் பணியாற்றியுள்ளார்.

இதனால், தலைமை செயலாளராக நியமிக்கப்பட்ட அவர் எப்படி நடுநிலைமையுடன் செயல்படுவார் என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதுசம்பந்தமாக தேர்தல் ஆணையத்திடம் அளித்த மனுவை ஆணையம் பரிசீலிக்கவில்லை. எனவே, தலைமை செயலாளராக சாய்குமாரை நியமித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர், பணி தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த பொது நல வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Related Stories: