பணகுடி, பிப். 24: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இன்பதுரை எம்எல்ஏ, அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
திசையன்விளை வட்டாரத்தில் பருவ மழை சரியாக பெய்யவில்லை. எனவே விவசாய பணிகள் மற்றும் குடிநீர் தேவைகளுக்காக மணிமுத்தாறு அணையிலிருந்து சிறப்பு ஆணை மூலம் நீரை வழங்க வேண்டும் என்று கடந்த 23.12.20 அன்று திசையன்விளை வட்டார விவசாயிகளுடன் வந்து நெல்லையில் தங்களை நேரில் சந்தித்து வலியுறுத்தினோம்.
விவசாயிகளின் இந்த கோரிக்கையை ஏற்று கடந்த 3ம் தேதி முதல் பிப். 28ம் தேதி வரை திசையன்விளை பகுதி குளங்களுக்கு மணிமுத்தாறு நீரை வழங்கிட தங்களால் சிறப்பு அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் மணிமுத்தாறு அணை நீர் திசையன்விளை பகுதியில் உள்ள ஆயன்குளம், ஆனைகுளம் உள்ளிட்ட பெரும்பான்மையான குளங்களுக்கு வந்து சேரவில்லை. எனவே திசையன்விளை பகுதியிலுள்ள அனைத்து குளங்களும் முழுமையாக நிரம்ப மார்ச் 31 வரை மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் கால அளவை நீட்டித்துதர ஆணைபிறப்பித்து உதவிட வேண்டுகிறேன். இவ்வாறு அதில் கோரிக்கை விடுத்துள்ளார்.