புதுடெல்லி: இந்தியாவின் ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதலானது கடந்த மார்ச் மாதத்தில் மூன்று மடங்கிற்கும் மேலாக உயர்ந்துள்ளது. ஐரோப்பாவின் ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்ச் மாதத்தில் இந்தியா மீண்டும் தீவிரமான கச்சா எண்ணெய் கொள்முதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளது. மேலும் இந்த அறிக்கையில், ‘‘மார்ச் 2026ம் ஆண்டு ரஷ்ய எரிபொருட்களை அதிகம் கொள்முதல் செய்த நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருந்தது.
இது மொத்தம் 5.8பில்லியன் யூரோ மதிப்பிலான ரஷ்ய ஹைட்ரோகார்பன்களை இறக்குமதி செய்துள்ளது. இந்தியாவின் மொத்த கொள்முதலில் கச்சா எண்ணெய் சார்ந்த பொருட்கள் 91சதவீதம் இடம் பிடித்துள்ளன. இதன் மதிப்பு மொத்தம் 5.3பில்லியன் யூரோவாகும். மார்ச் மாதத்தில் ரஷ்யாவில் இருந்து செய்யப்பட்ட இறக்குமதி மட்டும் மூன்று மடங்கு அதிகரித்து உள்ளது.
கடலில் பயணித்துக்கொண்டு இருந்த சரக்கு கப்பல்கள் மற்றும் ஏற்கனவே பொருளாதார தடை விதிக்கப்பட்ட கப்பல்கள் மூலம் வரும் சரக்குகளுக்கு ஒரு மாத காலத்திற்கு பொருளாதார தடையில் இருந்து விலக்கு அளிப்பதாக அமெரிக்கா அறிவித்ததால் ரஷ்யாவின் எண்ணெய் கொள்முதலை நிறுத்தி வைத்திருந்த பொதுத்துறை நிறுவனங்கள் மீண்டும் ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யத் தொடங்கின. கடந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மார்ச் கொள்முதல் 72சதவீதம் அதிகரித்து உள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
