சித்தூர்: ஆந்திராவில் பறவை காய்ச்சல் பாதிப்பால் 4 கிராமங்களில் கண்காணிப்பு மண்டலங்கள் அறிவிக்கப்பட்டு கோழிகள் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் அன்னமய்யா மாவட்டம் மற்றும் சித்தூர் மாவட்டத்தில் பறவைக்காய்ச்சல் பரவியது கண்டறியப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அன்னமய்யா மாவட்டத்தில் அம்மகரிப்பள்ளி, புட்டவாரிப்பள்ளி, கம்பம்வாரிப்பள்ளி ஆகிய 3 கிராமங்களும், சித்தூர் மாவட்டம் கார் வேட்டி நகரம் மண்டலத்தில் ஆர்.கே.வி.பி.பேட்டை இந்திரா காலனியில் உள்ள நாட்டுக்கோழிப் பண்ணை ஆகியவை பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்த கிராமங்களை சுற்றி 1 கி.மீ. சுற்றளவு பாதிக்கப்பட்ட மண்டலமாகவும், 1 முதல் 10 கி.மீ. சுற்றளவு கண்காணிப்பு மண்டலமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் இருந்து கோழிகளை கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கால்நடை வளர்ப்புத்துறையின் சிறப்பு தலைமைச் செயலாளர் ராஜசேகர் இதுகுறித்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். தொடர்ந்து இந்த பகுதிகளில் பாதுகாப்பு கவச உடை அணிந்து கால்நடைத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். பறவை காய்ச்சல் பாதிப்பு அப்பகுதி கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
