திருவாரூர், பிப். 21: திருவாரூர் அருகே கூடூரில் ரயில்வே கேட் அமைத்து தர கோரி சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 100 பேரை போலீசார் கைது செய்தனர். திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை வழியாக காரைக்குடிக்கு புதிய அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு ரயில் சேவை துவங்கியது. இந்நிலையில் இந்த ரயில் பாதையில் ஏற்கனவே இருந்து வந்த ரயில்வே கேட்டுகள் பலவற்றிலும் ஆட்களை குறைப்பதற்காக அந்த ரயில்வே கேட் இருந்த இடத்தில் ரயில்வே லைன் அடிப்பகுதியில் பொதுமக்கள் சென்று வரும் வகையில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.அதன்படி திருவாரூர் அருகே கூடூர் என்ற இடத்தில் இதே போன்று ஒரு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சுரங்கப்பாதையானது அங்கு உள்ள காட்டாற்றின் கரையை ஒட்டியவாறு அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்தக் காட்டாற்றில் தண்ணீர் செல்லும் காலங்களில் சுரங்கப் பாதையின் வடிகாலுக்காக அமைக்கப்பட்டுள்ள குழாயில் ஆற்றின் நீரானது மழை காலங்களில் உட்புகுந்து இந்த சுரங்க பாதையை அடைத்து வருவது வழக்கமாக இருந்து வரும் நிலையில் இந்த சுரங்கப்பாதையை கூத்தங்குடி, அன்னுக்குடி, அன்னவாசல், கல்யாணமகாதேவி, கட்டளை தெரு உட்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கடந்து திருவாரூர் நகரத்திற்குள் வரமுடியாமல் பாதிக்கப்படும் சூழல் இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது மழை காலம் ஓய்ந்த பின்னரும் 2 மாத காலமாக இந்த சுரங்க பாதையில் தண்ணீர் வடியாமல் இருந்து வருகிறது.