புடாபெஸ்ட்: ஹங்கேரியில் பிரதமர் விக்டர் ஆர்பனின் அரசை அகற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரபல கலைஞர்கள் பலர் பங்கேற்ற பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடைபெற்றது. ஹங்கேரியில் தலைமுறை இடைவெளி விரிவடைந்து வருகின்றது. அங்குள்ள இளைஞர்கள் ஓர்பனின் சர்வாதிகார ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு பெருமளவில் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். அதே நேரத்தில் மூத்த குடிமக்கள் பிரதமருக்கு விசுவாசமாக இருக்கின்றனர். இந்நிலையில் இன்று அங்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பிரதமர் விக்டர் ஆர்பனின் தேசியவாத மக்கள் அரசை பதவியில் இருந்து அகற்ற வேண்டும் என்று அழைப்பு விடுக்கும் வகையில் மிக பிரமாண்ட இசைநிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்ச்சியில் 50க்கும் மேற்பட்ட பிரபல இசைக்குழுக்கள் பங்கேற்றன. குடிமை எதிர்ப்பு இயக்கம் என்ற குழு இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. ஒவ்வொரு பாடலும் ஊழல் நிறைந்த இந்த ஆட்சி முறையை விமர்சிப்பதாக அமைந்திருந்தது. 7 மணி நேரம் நடந்த இந்த நிகழ்ச்சியில் சுமார் ஒரு லட்சம் பேர் கலந்து கொண்டனர். மேலும் ஒருலட்சத்துக்கும் மேற்பட்டோர் இணையம் வாயிலாகவும் இந்த நிகழ்ச்சியை நேரலையில் கண்டு களித்தனர்.
