×

தலைமைச் செயலாளர், டிஜிபியைத் தொடர்ந்து சென்னை போலீஸ் கமிஷனர் அருண் மாற்றம்: புதிய கமிஷனராக அபின் தினேஷ் மோதக் நியமனம்; இன்று ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்ற முடிவு

சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அருண் நேற்று மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதில் அமலாக்கத்துறை ஏடிஜிபி அபின் தினேஷ் மோதக் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் வருகிற 23ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் நேர்மையான அதிகாரிகளை மாற்றி தங்களுக்கு வேண்டிய அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்தார். அதைத் தொடர்ந்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் மாற்றப்பட்டு சாய்குமார் நியமிக்கப்பட்டார். டிஜிபி வெங்கட்ராமன் மாற்றப்பட்டு சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டார். தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ் மாற்றப்பட்டு சஞ்சய்குமாரும், மதுரை கமிஷனர் லோகநாதன் மாற்றப்பட்டு அபிஷேக் தீக்‌ஷித் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல 8 மாவட்ட எஸ்பிக்கள், 2 கலெக்டர்கள் மாற்றம் செய்யப்பட்டனர். சென்னை போலீஸ் கமிஷனர் அருணை மாற்ற வேண்டும் என்று தவெக தரப்பில் தொடர்ந்து புகார் கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால், தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்தநிலையில், சென்னை கமிஷனர் அருணை மாற்றி தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவிட்டது. மேலும் புதிதாக நியமிக்கப்பட்ட போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோதக் நேற்று இரவு பதவி ஏற்றுக் கொண்டார். மாற்றப்பட்ட அருணுக்கு தேர்தல் தொடர்பான பணிகள் எதையும் வழங்கக் கூடாது என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், உள்துறைச் செயலாளர் தீரஜ்குமார் உள்ளிட்ட சில ஐஏஎஸ் அதிகாரிகள் இன்று மாற்றம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. தமிழக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை மொத்தமாக தேர்தல் ஆணையம் மாற்றி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Chennai ,Police Commissioner ,Arun ,Chief Secretary ,DGP ,Abin Dinesh Modak ,IAS ,Enforcement Directorate ,ADGP ,Tamil Nadu ,
× RELATED செல்போனில் எப்போதும் அரட்டை: கணவர் கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை