×

முதல்வரின் செயலாளர் உமாநாத்துக்கும் தேர்தல் பணிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை: உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்

சென்னை: முதலமைச்சரின் செயலாளர் உமாநாத்துக்கும் தேர்தல் பணிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் பாஜ வழக்கறிஞர் ஏற்காடு மோகன்தாஸ் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், முதலமைச்சரின் செயலாளர் உமாநாத் தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் செயல்பட்டு வருகிறார். தேர்தல் அறிவிப்புக்கு பிறகு உமாநாத், மாவட்ட கலெக்டர்களுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். எனவே, முதலமைச்சரின் செயலாளர் உமாநாத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, உமாநாத்தை எதிர்மனுதாரராக சேர்க்குமாறு நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. அதன்படி ஐஏஎஸ் அதிகாரி உமாநாத் வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டார். இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன், மனுதாரரால் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கும் தேர்தல் பணிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுவுக்கு ஏப்ரல் 17ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

Tags : Chief Minister ,Umanath ,Election Commission ,High Court ,Chennai ,Court ,Chennai High Court ,BJP ,Yercaud Mohandas ,Tamil Nadu… ,
× RELATED செல்போனில் எப்போதும் அரட்டை: கணவர் கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை