நாகர்கோவில், பிப்.19: வருவாய்துறை ஊழியர்களின் 2ம் நாள் போராட்டம் காரணமாக தாலுகா அலுவலகங்கள் மூடப்பட்டதால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். அனைத்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்கப்பட வேண்டும். துணை தாசில்தார்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தனி ஊதியம் ₹1300, அலுவலக உதவியாளர் பதிவுரு எழுத்தர்களுக்கு தனி ஊதியம் வழங்க வேண்டும். புதியதாக நியமனம் செய்யப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட தலைநகரங்களில் அடிப்படை பயிற்சி மற்றும் நில அளவை பயிற்சி வழங்க வேண்டும். மாவட்டங்களில் அதிக அளவில் காலியாக உள்ள பணியிடங்களை உடன் நிரந்தர அடிப்படையில் நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.