அறந்தாங்கி, பிப்.19: தினகரனில் வெளியான செய்தியின் எதிரொலியாக அறந்தாங்கி நகரில் செப்டிக்டேங்க் வாகனங்கள் கழிவுகளை கொட்டினால், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என அறந்தாங்கி நகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.
அறந்தாங்கி நகரில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் உள்ள செப்டிக் டேங்குகளில் இருந்து செப்டிக் டேங்க் வாகனங்களில் சேகரிக்கப்படும் கழிவுநீர் அறந்தாங்கி நகரில் களப்பக்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொட்டப்பட்டன. இதனால் சுகாதாரக் கேடு ஏற்படுவதாக தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. தினகரனில் வெளியான செய்தியின் எதிரொலியாக அறந்தாங்கி நகராட்சி அலுவலகத்தில் அறந்தாங்கி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் உள்ள செப்டிக் டேங்குகளில் சேகரமாகும் கழிவுகளை அனுமதி இல்லாமல் நகரப்பகுதியில் கொட்டியது தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி சுகாதார ஆய்வாளர் சேகர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் செப்டிக் டேங்க் கழிவு அகற்றும் வாகன உரிமையாளர்கள், ஓட்டுனர்கள், நகராட்சி மேலாளர் (பொறுப்பு), துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள், அனிமேட்டர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.