தேவதானப்பட்டி அருகே ஆடுகள் திருட்டு

தேவதானப்பட்டி, ஏப். 5: தேவதானப்பட்டி பகுதியில் தொடர்ந்து ஆடுகள் திருடப்படும் சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட நாகம்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி பாண்டி(51). இவர் விவசாயம் செய்து கால்நடைகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வீட்டின் முன் உள்ள ஆட்டுக்கொட்டகையில் ஆடுகளை கட்டிவைத்துவிட்டு வீட்டிற்குள் தூங்க சென்றுவிட்டார். பின்னர் நேற்று அதிகாலை எழுந்து பார்த்தபோது கட்டிவைத்திருந்து ஆடுகளில் இரண்டு பெரிய ஆடுகளை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து பல இடங்களில் தேடியும் தகவல் இல்லை. ஆடுகள் திருட்டு தொடர்பாக தேவதானப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர். சமீககாலமாக சில்வார்பட்டி, நாகம்பட்டி, நல்லகருப்பன்பட்டி, உள்ளிட்ட இடங்களில் இரவு நேரங்களில் ஆடுகள் தொடர்ந்து திருடு போய்வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு ஆடுகள் திருடும் மர்ம கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

Related Stories: