திருமங்கலம் தொகுதி திமுக வேட்பாளர் சேடபட்டி மணிமாறன் வேட்பு மனு தாக்கல்

திருமங்கலம், ஏப். 5: திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக சேடபட்டி மு.மணிமாறன் போட்டியிடுகிறார். இதையொட்டி நேற்று காலை திருமங்கலம் விருதுநகர் ரோடு ஆறுகண் பாலத்தில் இருந்து சேடபட்டி மணிமாறன் மற்றும் திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தை உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள், பொதுமக்கள் திரண்டு ஊர்வலமாக வந்தனர்.

கப்பலூரில் அமைந்துள்ள திருமங்கலம் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்த திமுக வேட்பாளர் சேடபட்டி மணிமாறன் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவஜோதியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இவருக்கு மாற்று வேட்பாளராக பாரதி மணிமாறன் மனு தாக்கல் செய்தார். திமுக வேட்பாளருடன் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் உச்சப்பட்டி உலகநாதன், தேமுதிக நகர செயலாளர் ராதாகிருஷ்ணன், மதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயராமன், விசிக மாவட்ட செயலாளர் கலைசெல்வன் உடன் இருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் திமுக வேட்பாளர் சேடபட்டி மணிமாறன் கூறியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆசிகளுடன், வழிகாட்டுதலுடன் இந்த தேர்தலில் திருமங்கலம் தொகுதியில் போட்டியிடுகிறேன். எனக்கு ஒட்டுமொத்த மக்கள் ஆதரவு அளிக்கின்றனர். பெரும் மகிழ்ச்சி, ஆரவாரத்துடன் வந்து மனு தாக்கல் செய்தோம். ஒட்டுமொத்த தமிழ்நாடே இன்று திமுக தலைவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் மீண்டும் தமிழகத்திற்கு முதல்வராக வர வேண்டும் என நினைக்கின்றனர். திமுகவின் தேர்தல் அறிக்கை வழக்கம்போல் இந்த முறையும் கதாநாயகனாகவே திகழ்கிறது. இவ்வாறு கூறினார்.

 

Related Stories: