புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் வரும் 9ம் தேதி நடக்கிறது. இத்தேர்தலில் தேஜ கூட்டணியில் என்.ஆர்.காங்., 16 இடங்களிலும், பாஜ 10 இடங்களிலும், அதிமுக, லஜக தலா 2 இடங்களிலும் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேஜ கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பங்கேற்கும் ரோடு ஷோ நேற்று நடந்தது. இதையொட்டி, புதுவை முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ரோடு ஷோவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று மாலை 4 மணியளவில் லாஸ்பேட்டையில் உள்ள விமான நிலையத்துக்கு ராணுவ ஹெலிகாப்டரில் வந்து இறங்கினார். அரை பாஜ தலைவர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் வரவேற்றனர். அங்கிருந்து கார் மூலம் கிழக்கு கடற்கரை சாலை, முத்தியால்பேட்டை வழியாக அஜந்தா சிக்னலுக்கு வந்தார். அங்கு அவரை முதல்வர் ரங்கசாமி வரவேற்றார்.
தொடர்ந்து, அங்கு வரிசையாக நின்றிருந்த தேஜ கூட்டணியின் வேட்பாளர்களுக்கு பிரதமர் வாழ்த்துகளை தெரிவித்தார். பின்னர் மோடி, ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம், பாஜ மாநில தலைவர் ராமலிங்கம் ஆகியோருடன் திறந்த வேனில் நின்றபடி அஜந்தா சிக்னலில் இருந்து காமராஜர் சதுக்கம் வரை 1 கி.மீ. தூரத்துக்கு ரோடு ஷோவில் மோடி பங்கேற்றார்.
இருபக்கமும் திரண்டிருந்த பாஜ மற்றும் கூட்டணி கட்சியினர் பூக்களை தூவி வரவேற்றனர். பாரம்பரிய மேளம், நாதஸ்வரம், தப்பு உள்ளிட்ட இசைக்கருவிகளை இசைத்து வரவேற்றனர். மோடி பார்வையில் படும்படி தற்காலிக ‘மோடி டீ ஸ்டால்’ அமைக்கப்பட்டிருந்தது. மக்களை பார்த்து கையசத்தபடி துவங்கிய ரோடுஷோ, அஜந்தா சிக்னலில் 4.30 மணிக்கு துவங்கி, காமராஜர் சதுக்கத்தை 5.12க்கு வந்தடைந்தது.
