சேத்துப்பட்டு, பிப்.19: கட்டண சேவை வரி வசூலிக்க எதிர்ப்பு தெரிவித்து, சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்வதை வியாபாரிகள் நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் நெல் உற்பத்தியில் திருவண்ணாமலை மாவட்டம் 2ம் இடத்தில் உள்ளது. இங்குள்ள விவசாயிகள் நெல், மணிலா, பயறு, மிளகாய் போன்ற தங்களது வேளாண் விளைபொருட்களை, சேத்துப்பட்டு பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வியாபாரிகளிடம் விற்பனை செய்து வருகின்றனர். இங்கு நல்ல விலை கிடைப்பதால் திருவண்ணாமலை மட்டுமின்றி விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் விளைபொருட்களை விற்று வருகின்றனர்.இந்நிலையில், வியாபாரிகள் வெளியே விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்யும் நெல்லுக்கும், சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கட்டண சேவை வரியை வசூலிக்கும் முறை உள்ளது. இந்த நடைமுறை கொரோனா ஊரடங்கின்போது மத்திய அரசின் உத்தரவால் நிறுத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து, கடந்த 5 மாதங்களாக ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் மட்டுமே கட்டண சேவை வரி வசூலிக்கப்பட்டு வந்தது.