கே.வி.குப்பம், பிப்.19: ேக.வி.குப்பம் அருகே நடந்த மாடுவிடும் விழாவில் பார்வையாளர்கள் போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் காளைகள் முட்டியதில் 10 பேர் காயம் அடைந்தனர்.வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் மேல் காவனூர் காமாட்சியம்மன் பேட்டையில் நேற்று மாடு விடும் திருவிழா நடைபெற்றது. இதில், பேரணாபட்டு, குடியாத்தம், கே.வி.குப்பம், காட்பாடி, வேலூர், அணைக்கட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இதில் குறிப்பிட்ட தூரத்தை குறைந்த நேரத்தில் கடந்த காளைகளுக்கு முதல் மூன்று பரிசுகளாக இருச்சக்கர வாகனங்கள் உள்ளிட்ட 35 பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவை காண ஆயிரக்கணக்கான இளைஞர்கள் காலை 8 மணியளவில் இருந்தே வர தொடங்கினர். முன்னதாக தீயணைப்பு துறையினர், கால்நடை மருத்துவர்கள் ஆகியோர் தயாரான நிலையில் இருந்தனர். தொடர்ந்து, விழாவை ஆர்டிஓ ஷேக் மன்சூர் தொடங்கி வைத்தார். தாசில்தார் ராஜேஸ்வரி தலைமையிலான வருவாய் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். டிஎஸ்பி தரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் முரளிதரன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.