திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று பங்குனி உத்திர திருவிழாவை: பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று பங்குனி உத்திர திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று (ஏப். 1) பங்குனி உத்திர திருவிழாவையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. காலையில் வள்ளியம்மன் தபசுக்கு புறப்பட்டார். இன்று அதிகாலை முதலே திரளான பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.

மாலை சுவாமி குமரவிடங்கப்பெருமான் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி பந்தல் மண்டபம் முகப்பில் வைத்து சுவாமிக்கும், வள்ளியம்மனுக்கும் தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு கோயிலில் 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமிக்கும், வள்ளியம்மனுக்கும் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.

பங்குனி உத்திர நட்சத்திரத்தன்று தங்கள் குல தெய்வ கோயில்களிலும், அவ்வாறு குல தெய்வம் தெரியாதவர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலிலும் வழிபட்டனர். இதனால் கோயில் மற்றும் நகர் எங்கும் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது.

Related Stories: