மன்னார்குடி, பிப்.18: மன்னை தொகுதிக்குட்பட்ட நகர திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசனை கூட்டம் தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் இளையராஜா, இந்திரஜித் ஆகியோர் தலைமையில் மன்னார்குடி நகர திமுக அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தின் நோக்கங்கள் குறித்து, நகர திமுக செயலாளர் வீராகணேசன், தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அரவிந்த், துணை ஒருங்கிணைப்பாளர்கள் சிவகாந்தி, மதி முத்துக்குமார், சட்ட ஆலோசகர் வக்கீல்கள் வீரக்குமார், நடேஷ் ஆகியோர் பேசினர். இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற எம்எல்ஏ டிஆர்பி ராஜா பேசுகையில், வரும் சட்டமன்ற தேர்தலில் தகவல் தொழில்நுட்ப அணியின் செயல்பாடுகள் முக்கிய பங்கு வகிக்கும். மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத செயல்பாடுகளை உரிய ஆதாரங்களோடு மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும். எதிர்தரப்பு நபர்களின் கருத்துக்களுக்கு கண்ணியமான முறையில் பதில் அளிக்க வேண்டும். ஆட்சியாளர்களின் அதிகார துஷ்ப்பிரயோகங்களை சமூக வலைத்தளங்கள் மூலம் மக்கள் மன்றத்தில் வெளிக்கொண்டு வரும் பணிகளில் இளைஞர்கள் துடிப்புடன் பணியாற்ற வேண்டும் என்றார்.