புதுடெல்லி: மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் நடைமுறைகளை முழுமையாக முடக்கியுள்ளதாக ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார்.
மேற்குவங்க சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஆளும் திரிணாமுல் காங்கிரசுக்கும், எதிர்கட்சியான பாஜகவுக்கும் கடுமையான போட்டி நிலவுகிறது. இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் தேர்தல் தொடர்பாக டெல்லியில் ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு டெல்லியில் இன்று தலைமை தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு ஒன்றை அளித்தார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், ‘மிகவும் முக்கியமான விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்க வந்துள்ளோம்.
மேற்குவங்கத்தில் தேர்தல் நடைமுறைகளை திரிணாமுல் காங்கிரஸ் முற்றிலும் முடக்கியுள்ளது. ஜனநாயக அமைப்பின் மீது முழுமையான கட்டுப்பாட்டை செலுத்தி, மக்களை அச்சுறுத்தி வருகின்றனர். அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வீடு வீடாகச் சென்று வாக்காளர்களை மிரட்டியதை விளக்கினோம். பாஜகவிற்கு வாக்களிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தப்பிக்க முடியாது என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேற்குவங்கத்தில் உள்ள உயர் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை ஒட்டுமொத்த நிர்வாக அமைப்பும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கிளை அமைப்பாக மாற்றப்பட்டிருப்பது குறித்து ஆழ்ந்த கவலையைத் தெரிவித்தோம்.
வரும் தேர்தல்கள் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் முறைப்படி கோரிக்கை வைத்துள்ளோம். கடந்த 3 தேர்தல்களில் திரிணாமுல் காங்கிரஸ் கடைபிடித்த அடக்குமுறை உத்திகள் இந்த முறை மீண்டும் நடக்க அனுமதிக்கக்கூடாது. தற்போது நடக்கும் தேர்தலில் திரிணாமுல் காங்கிரசுக்கு எதிராக மக்கள் பலத்த குரல் கொடுத்து வருகின்றனர். எங்களது புகாருக்கு தேர்தல் ஆணையம் சாதகமாகப் பதிலளித்துள்ளதுடன், சுதந்திரமான தேர்தலை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதி அளித்துள்ளது’ என்று கூறினார்.
