குளித்தலை, பிப்.18: குளித்தலை தாலுகா அலுவலக வளாகத்தில் தாசில்தார் அலுவலகம், கிளை சிறைச்சாலை, கருவூலம், இசேவை மையம், பொதுப்பணித்துறை அலுவலகம், சப்கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் உள்ளன. இதனால் தினந்தோறும் அலுவலகத்திற்கு உயர் அதிகாரிகளும், பொதுமக்களும் வாகனத்திலும், டூவீலர்களிலும் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் அனுமதியின்றி மணல் அள்ளிய தாக வருவாய்த்துறை அதிகாரிகளால் சிறைப்பிடிக்கப்பட்ட வாகனங்கள் பல மாதங்களாக தாலுகா அலுவலகம் முன் நிறுத்தப்பட்டிருக்கிறது. இதனால் அவசர நிமித்தமாக வாகனத்தில் வருபவர்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது. மேலும் இம்மாதம் இறுதிக்குள் சட்டசபை தேர்தலுக்கு தேதி அறிவிக்கப்போகும் நிலையில் தேர்தல் பணி தொடங்கிவிட்டால் குளித்தலை தொகுதிக்குட்பட்ட அனைத்து தேர்தல் அலுவலர்களும் இந்த அலுவலகத்திற்கு தான் வரவேண்டிய சூழ்நிலை உள்ளது.