சென்னை: வரும் சட்டமன்றத் தேர்தல் ‘களத்தில் இளைஞர் அணி’ பரப்புரை நடத்த வேண்டும் என இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: `களத்தில் இளைஞர் அணி’ எனும் மாபெரும் தேர்தல் பிரசார முன்னெடுப்பை, மீண்டும் கையில் எடுக்கிறது நம் இளைஞர் அணி. இதன் அடிப்படையில், ஒவ்வொரு பாகத்திற்கும் உட்பட்ட இளைஞர் அணி நிர்வாகிகளுடன் சேர்த்து அந்த பாகத்தில் கழகத்தின் மீது ஆர்வமும் பற்றும் கொண்ட 10 இளைஞர்கள், பாக வாரியாக உள்ள இளம் வாக்காளர்களை நேரில் சந்தித்து, திமுக தலைவர் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிப்பர்.
சட்டமன்றத் தொகுதி வாரியாக, ஒரு பாகத்திற்கு என தேர்வு செய்யப்படும் இந்த 10 இளைஞர்கள், ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 10 வரை முதற்கட்ட பரப்புரையும், ஏப்ரல் 11 முதல் 20 வரை இரண்டாம்கட்ட பரப்புரையும் என மொத்தம் இரண்டு முறை வாக்காளர்களை அவரவர் வீடுகளுக்கே சென்று சந்தித்து, திமுக அரசின் ஐந்தாண்டு சாதனைகளை எடுத்துக்கூறி வாக்கு சேகரிப்பர். பாக வாரியாக `களத்தில் இளைஞர் அணி’ முன்னெடுப்பிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இளைஞர்களின் பட்டியலை, மாவட்ட-மாநகர-ஒன்றிய-நகர-பகுதி-பேரூர் செயலாளர்களிடம் இம்மாதம் 31ம் தேதிக்குள் பெற்றுத்தரும்படி மாவட்ட-மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். `களத்தில் இளைஞர் அணி’ எனும் இந்த மகத்தான முன்னெடுப்பின் மூலம், திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைய அயராது உழைப்போம். வெல்வோம் 200, படைப்போம் வரலாறு. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
