சேலம், மார்ச் 16: காஸ் தட்டுப்பாடு விவகாரத்தில் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து, சேலம் மாவட்டம் முழுவதும் 69 இடங்களில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் சேர்ந்து ஈரான் மீது தொடுத்துள்ள போரால் சர்வதேச அளவில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை, நாடு முழுவதும் சமையல் காஸ் சிலிண்டருக்கும், வணிக ரீதியிலான காஸ் சிலிண்டருக்கும் தட்டுபாடு ஏற்பட்டு மக்கள் அவதியுற்று வருகின்றனர். ஒன்றிய பாஜ என்டிஏ அரசின் தவறான வெளியுறவுக் கொள்கையினாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததன் விளைவாகவும் இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளதாக, எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனையடுத்து, ஒன்றிய பாஜ அரசையும், அதன் அடிமைக் கூட்டணியையும் கண்டித்து, மாநிலம் முழுவதும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
