நெல்லை : நெல்லை மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்கும் எண்ணும் மையத்தை பொது தேர்தல் பார்வையாளர்கள் ரிஷிகேஷ் பாஸ்கர் யசோத், அனுபா ஸ்ரீவஷ்தவா மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் சுகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை, நெல்லை, அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
இந்த தொகுதிகளில் ஏப்.23ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. வாக்குப்பதிவு முடிந்த பின்னர் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் 5 தொகுதிகளின் வாக்கு எண்ணும் மையமான நெல்லை அரசு பொறியியல் கல்லூரிக்கு எடுத்து வரப்படுகிறது. அங்கு வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடக்கிறது. வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகின்றன.
வாக்கு எண்ணும் மையம் மற்றும் அங்கு நடந்து வரும் பணிகளை நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் வெளி மாநில பொது தேர்தல் பார்வையாளர்கள் ரிஷிகேஷ் பாஸ்கர் யசோத், அனுபா ஸ்ரீவஷ்தவா, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் சுகுமார் ஆகியோர் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் தேஷ்முக் ஷேக்கார் சஞ்சய், எஸ்பி பிரசன்னகுமார் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி வாக்கு எண்ணும் மையத்திற்கு தேவையான பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை வசதியுடன் வாக்கு எண்ணும் மையங்களை அமைப்பதற்கான பணிகள் அங்கு நடந்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் 1,678 வாக்குச்சாவடி மையங்களிலிருந்து பெறப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் விவிபேட்களை பாதுகாப்பாக வைக்கும் இடங்களை பொது பார்வையாளர்கள் பார்வையிட்டனர்.
நெல்லை, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கு நிர்வாகப் பிரிவு கட்டிடத்திலும், அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு மெக்கானிக்கல் பிரிவு கட்டிடத்திலும், ராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்கு கம்ப்யூட்டர் பிரிவு கட்டிடத்திலும், பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக் பிரிவு கட்டிடத்திலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைப்பதற்கான பாதுகாப்பு அறைகளும், வாக்கு எண்ணுவதற்கான அறைகளும் அமைக்கப்படுகிறது.
வாக்கு எண்ணிக்கை நடக்கும் மையங்களில் ஜெனெரட்டர் வசதிகள், குடிநீர் வசதிகள், மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது. வாக்கு எண்ணிக்கைக்கான மேஜைகள் அமைத்தல், வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாக்குபெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்படவுள்ள அறையிலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறையிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது தொடர்பாகவும் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின்போது நெல்லை மாவட்ட வருவாய் அலுவலர் துரை, தேர்தல் நடத்தும் அலுவலர் பாளை. மோனிகா ராணா, அம்பாசமுத்திரம் ஆயுஸ்குப்தா, நெல்லை பிரியா, ராதாபுரம் ராஜசெல்வி, நாங்குநேரி சிந்து, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) அனிதா, தேர்தல் சுப்பிரமணியன், தேர்தல் தாசில்தார் முருகன் மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
