அரவக்குறிச்சி, பிப். 16: அரவக்குறிச்சி நகர பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க லாரிகளை புறவழிச்சாலையில் சென்று வர உத்தரவிட்டு போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டார தலைநகராகும். இங்கிருந்து சென்னை, நாகூர், ராயவேலூர், கரூர், திண்டுக்கல், பழனி, தாராபுரம், கோவை, திருச்சி மற்றும் பொள்ளாச்சி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு தினசரி சுமார் 100 க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன. இந்நிலையில், அரவக்குறிச்சி நகர பகுதியில் மணல் லாரிகள் மற்றும் சரக்கு லாரிகளின் போக்குவரத்து அதிகமாக இருந்து வருகின்றது. இதனால் லாரிகள், பேருந்துகள் என அனைத்து வாகனங்களும் நகருக்குள் வந்து செல்வதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. குறிப்பாக பள்ளி கல்லூரி துவங்கும் மற்றும் முடியும் நேரங்களில் பள்ளி, கல்லூரி வாகனங்களும் வருவதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாகின்றது.