வேலூர், பிப். 16: சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை பெருமுகையில் விபத்துகளை குறைப்பதற்கு சுரங்கப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக எஸ்பி செல்வகுமார் தெரிவித்தார். சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வேலூர் மாவட்டத்தில் வழியாக செல்கிறது. இதனால் இச்சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து அதிகமாக காணப்படுகிறது. மேலும் தேசிய நெடுஞ்சாலையில் அதிகளவில் விபத்து நடைபெறும் இடங்கள் கண்டறிந்து, அப்பகுதிகளில் விபத்து பகுதி என அறிவிப்பு பலகை மற்றும் சிக்னல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் விபத்துகள் 80 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தாண்டு வேலூர் மாவட்டத்தில் கந்தனேரி, பெருமுகை ஆகிய தேசிய நெடுஞ்சாலை பகுதிகளிலும், பாகாயம், திருவலம் காவல் நிலைய எல்லைகளில் சாலை விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டது. இதையடுத்து விபத்து நடைபெறும் பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, வேலூர் அடுத்த பெருமுகையில் எஸ்பி செல்வகுமார், நேற்று மாலை ஆய்வு செய்தார்.