கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட முன்னாள் அமைச்சர் சம்பத், முன்னாள் எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் இடையே கடும் போட்டி நிலவுகிறது. 2016ல் இங்கு எம்எல்ஏவாக தேர்வான சத்யா பன்னீர்செல்வம் தன்னை மீறி மாவட்டத்தில் வளர்ந்துவிடக் கூடாது என்பதாலே 2021ல் அவரை தேர்தலில் போட்டியிட முடியாதபடிக்கு சம்பத் தடைபோட்டார் என தகவல் வெளியாகின. தற்போது, கடலூருக்கு மாற்றாக பண்ருட்டி தொகுதியையும் சம்பத் குறிவைத்துள்ளதால் அதிமுகவில் கோஷ்டி சலசலப்பு நீடிக்கிறது.
இது ஒருபுறமிருக்க பாஜவின் மாநில செயலாளரான அஸ்வதாமன் கடந்த 6 மாதத்திற்கு முன்பே பாஜ பண்ருட்டி தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அவர் தொகுதியில் தீவிரமாக களமிறங்கி பல்வேறு மக்கள் பிரச்னைகளுக்காக குரல் கொடுத்து வருகிறார். டெல்லி பாஜ தலைமையிடம் நேரிடையாக பேசக்கூடிய வழக்கறிஞரான இவர், பொதுமக்களுக்கான சேவையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதனால் பண்ருட்டியில் பாஜ போட்டியிடுவது உறுதியாகி விட்டதாக அக்கட்சியினர் கூறி வருகின்றனர்.
இதற்கு முக்கிய காரணமாக பண்ருட்டியில் அதிமுகவில் கோஷ்டி மோதல் கண்கூடாக தெரிவதை சுட்டிக் காட்டுவதோடு, அக்கட்சியில் யாருக்கு சீட்டு கொடுத்தாலும் சொந்த கட்சியினரே தனது வேட்பாளரை தோற்கடிக்க காத்திருப்பதாக கூறி, தங்களுக்குதான் பண்ருட்டியை ஒதுக்க வேண்டுமென பிடிவாதமாக தனது கட்சியின் டெல்லி தலைமை வரையிலும் பேசி கேட்டு வருகிறார்களாம். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பூத் கமிட்டிக்குகூட ஆளில்லாத பாஜ பண்ருட்டியை கேட்கலாமா, கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவருக்காக நாங்கள் பணியாற்ற வேண்டுமா? என அதிமுகவினர் குமுறி வருகிறார்களாம்.
பண்ருட்டி பலாவை கைப்பற்ற அதிமுகவுடன் பாஜ தொடர்ந்து குஸ்தியில் ஈடுபடுவதால், தேர்தலுக்கு முன்பே இருகட்சிகள் இடையிலான விரிசல் கண்கூடாக தெரிவதால் யார் நின்றாலும் தோல்வி உறுதி என்ற முணுமுணுப்பை தொகுதி வாக்காளர்களிடத்தில் இப்போதே கேட்க முடிகிறதாம்.
