அரசு மரக்கிடங்கு மத்திய நாற்றங்கால் பண்ணையில் வன அதிகாரி ஆய்வு

மேட்டுப்பாளையம், மார்ச் 20: மேட்டுப்பாளையம் அரசு மரக்கிடங்கில் உள்ள மத்திய நாற்றங்கால் பண்ணையில் கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் ஆய்வு மேற்கொண்டார். கோத்தகிரி சாலையில் உள்ள மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு சொந்தமான அரசு மரக்கிடங்கு செயல்பட்டு வருகிறது. இங்குள்ள மத்திய நாற்றங்கால் பண்ணையில் மலைவேம்பு,மகாகனி,தேக்கு, வேம்பு, பலா, பாதாம், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த மரக்கன்றுகள் காலநிலை மாற்றத்திற்கான தமிழ்நாடு உயிர்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டத்தின் கீழ் விவசாயிகள் மற்றும் நிறுவனங்களுக்கு இலவசமாக வழங்கும் தயார் செய்யப்பட்டு வருகின்றன. இங்கு வனத்துறையினரின் பராமரிப்பில் தற்போது சுமார் 27,000 மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று சென்னை கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை திட்ட இயக்குநர் ராமசுப்பிரமணியன் மற்றும் கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு ஆகியோர் மத்திய நாற்றங்கால் பண்ணையை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, நாற்றுக்களை நன்கு பராமரித்து விவசாயிகள் மற்றும் அரசு,தனியார் நிறுவனங்களுக்கு வழங்க அவர் அறிவுறுத்தினார். ஆய்வின் போது மேட்டுப்பாளையம் வனச்சரகர் சசிகுமார், வனவர் சிங்காரவேலு உள்ளிட்ட வனத்துறையினர் உடனிருந்தனர்.

Related Stories: