சென்னை: தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ‘யுகாதி’ திருநாள் நல்வாழ்த்துகள் என ஓ.பன்னீர்செல்வம் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்த வாழ்த்து செய்தியில்;
‘யுகாதி’ என்னும் புத்தாண்டுத் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ‘யுகாதி’ திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்பதற்கேற்ப, பேசும் மொழி வேறுபட்டு இருந்தாலும், வாழும் இடம் ஒன்றுதான் என்ற உணர்வோடு தமிழக மக்களுடன் ஒருங்கிணைந்து சகோதர சகோதரிகளாய் வாழ்ந்து வருவதும், கலை, நாகரிகம், பண்பாடு போன்றவற்றில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வதும் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.
இப்படிப்பட்ட ஒற்றுமையை பேணிக் காக்கும் ஆட்சியாக, மாற்று மொழி பேசும் மக்களை மகிழ்விக்கின்ற ஆட்சியாக தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களின் தலைமையிலான ‘திராவிட மாடல்’ ஆட்சி விளங்கிக் கொண்டிருக்கிறது. மலரும் புத்தாண்டு மேலும் வளத்தையும், நலத்தையும், வெற்றிகளையும் அளிக்கும் ஆண்டாக மலரட்டும் என்று வாழ்த்தி, மீண்டும் ஒருமுறை எனது இதயம் கனிந்த யுகாதி திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
