சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள `யுகாதி திருநாள்’ வாழ்த்துச் செய்தி:
பிரம்மன் உலகத்தை படைத்த நாளாக கருதப்படும் யுகாதி திருநாளை உவகையுடன் கொண்டாடி மகிழும், உலகெங்கும் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த யுகாதி திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். தமிழகத்தில் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள், தங்கள் மொழிகளை கடந்து சகோதர-சகோதரிகளாக, தமிழர்களின் இன்ப துன்பங்களிலும் பங்கேற்று ஒன்றுபட்டு வாழ்ந்து வருகின்றனர். யுகாதி திருநாளில், அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற வேண்டும் எனவும்; இன்னல்கள் நீங்கி இன்பம் சேர வேண்டும் எனவும் மனதார வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
