ஊட்டி, பிப்.11: ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட உல்லத்தி மற்றும் கடநாடு ஆகிய ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் ரூ.1.11 கோடி மதிப்பீட்டில் நடந்து வரும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார். உல்லத்தி ஊராட்சிக்குட்பட்ட அம்மநாடு பகுதியில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின்கீழ் ரூ.9.96 லட்சம் மதிப்பில் வீடுகளுக்கு குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் ரூ.14 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. கடநாடு ஊராட்சிக்குட்பட்ட கொணஹட்டி பகுதியில் 14வது மூலதன மானிய நிதி திட்டத்தின்கீழ் ரூ.26 லட்சம் மதிப்பில் மேம்படுத்தப்பட்ட சாலை சீரமைக்கப்பட உள்ளது.