திருவில்லிபுத்தூர், பிப்.11: திருவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போக்குவரத்து விதிகளை மீறியதாக ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 795 வழக்குகள் காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் விபத்துக்களை தடுக்கும் நோக்கத்தோடு மத்திய, மாநில அரசுகள் சார்பில் சாலை பாதுகாப்பு வாரம் கொண்டாடப்பட்டு வந்தது. தற்போது அது சாலை பாதுகாப்பு மாதமாக மாற்றப்பட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி, பேரணி, நாடகங்களை வட்டார போக்குவரத்துத்துறை அதிகாரிகள், போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் போலீசார் நடத்தி வருகின்றனர். ஆனாலும், போக்குவரத்து விதிமீறல் காரணமாக விபத்துகள் நடைபெற்று வருகின்றன.கடந்த 2020ம் ஆண்டு போக்குவரத்து விதிகளை மீறியதாக ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 795 வழக்குகள் திருவில்லிபுத்தூர் காவல்நிலைய உட்கோட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.