மாற்றுத்திறனாளிகள் விடிய, விடிய போராட்டம்
திருவில்லிபுத்தூர், பிப்.11. உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் போராட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் தாலுகா அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 21 பேரை நகர் போலீசார் கைது செய்தனர். கைதான அனைவரும் மாலை விடுவிக்கப்பட்டனர்.
அவர்கள் தங்களது வீடுகளுக்கு செல்லாமல், திடீரென மீண்டும் தாலுகா அலுவலகத்திற்கு வந்து, மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அவர்களுடன் தாசில்தார் சரவணன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இரவு 10 மணியானதால் அங்கேயே மாற்றுத்திறனாளிகள் படுக்கையை விரித்து தூங்க முயன்றனர். தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில், மாற்றுத்திறனாளிகள் தனியாருக்குச் சொந்தமான மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். மண்டபத்திலும் கோரிக்கைகளை வலியுறுத்தி விடிய, விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். திருமண்டம் மண்டபம் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் ஜெயக்குமார், ஒன்றிய செயலாளர் சசிக்குமார், மாவட்ட குழுவை சேர்ந்த திருமலை ஆகியோர் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உதவிகளை செய்தனர்.