மன்னார்குடி, பிப். 11: மன்னார்குடி திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா வெளியிட்டுள்ள அறிக்கை: திருவாரூர் மாவட்டத்தில் நடந்து வரும் இன்சூரன்ஸ் கணக்கெடுப்பில் பயிர் காப்பீட்டு நிறுவனத்தினர் மற்றும் சில அரசு அதிகாரிகள் சேர்ந்துகொண்டு பல குளறுபடிகளை செய்து வருவதாக விவசாயிகள் எனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். பல இடங்களில் அதிகாரிகள் தேர்ந்தெடுக்கும் பயிர்கள் சாய்ந்து கிடந்தாலும் அதிலிருந்து அறுவடை செய்து மாதிரிகள் எடுக்கப்பட்டு கணக்குகளில் 10 கிலோவுக்கு மேல் விளைச்சல் என பதியப்படுகிறது. விவசாயிகள் இன்சூரன்ஸ் நிறுவனத்தினால் வஞ்சிக்கப்பட்டு வருகிறார்கள். இடையர்நத்தம், தெற்குநத்தம், அசேஷம் தலையாமங்கலம், மூவாநல்லூர், ஆதனூர் மண்டபம் ஆகியவற்றில் உள்ள திறந்தவெளி கிடங்குகளிலும், சுந்தரகோட்டை, பாமணி ஆகிய கிடங்கு தொகுப்புகளிலும் ஏற்கனவே குறுவை நெல் பல ஆயிரம் மெட்ரிக் டன் தேங்கிக் கிடப்பது அரசு இயந்திரம் செயல்படாத நிலையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.