சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் கூட்டணி கட்சிகளின் வருகை இறுதி செய்யப்படாததாலும், இருக்கும் கட்சிகள் கூடுதல் தொகுதிகள் கேட்பதாலும் தொகுதி பங்கீட்டில் இழுபறி ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், இன்று மாலை திருச்சியில் நடக்கும் அரசு விழா மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
இந்த கூட்டத்திலும் பங்கேற்கவும், தொகுதி பங்கீட்டை இறுதி செய்யவும் தமிழ்நாடு பாஜ சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் நேற்று இரவு திருச்சி வந்தார். அப்போது அவர் அளித்த பேட்டி: இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடோ, காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை. எரிபொருள் மற்றும் காஸ் சிலிண்டர் கையிருப்பு உள்ளது.
தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை தற்போது வரை தொடங்கவில்லை. தொகுதி பங்கீடு குறித்து பேச எப்போது தேசிய ஜனநாயக கூட்டணியை எடப்பாடி பழனிசாமி அழைத்தாலும் நாங்கள் அதற்கு தயாராக உள்ளோம். தமிழக வெற்றி கழகம் எங்கள் கூட்டணியில் இணையுமா என்ற கேள்விக்கு, இதற்கு எடப்பாடி பழனிசாமி பதில் கூறுவார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பிரதமர் கூட்டத்தில் பங்கேற்க இன்று திருச்சி வரும் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சியினருடன் பியூஷ் கோயல் தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளார். பிரதமர் தமிழகம் பயணத்துக்கு முன்பே கூட்டணி, தொகுதி பங்கீடு முடிக்க திட்டமிட்ட பாஜ, அவர் 3 முறை தமிழகம் வந்தும் இதுவரை இறுதி செய்யவில்லை. இதனால், இன்று தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய பியூஷ் கோயல் தீவிரமாக உள்ளார்.
