அஜர்பைஜான் நாட்டிலுள்ள விமான நிலையம் மீது ஈரான் ராணுவம் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. நக்சிவன் சர்வதேச விமான நிலையம் மற்றும் ஒரு பள்ளி அருகே நடந்த தாக்குதலில் இருவர் காயம் அடைந்ததாகவும், இது தொடர்ந்தால் ஈரானுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம் எனவும் அஜர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரானிய எல்லைப் பகுதியில் இருந்து ஏவப்பட்ட பல ட்ரோன்கள் தமது நாட்டின் எல்லைக்குள் விழுந்து வெடித்துள்ளதாக அஸர்பைஜான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒரு ட்ரோன் நக்சிவன் சர்வதேச விமான நிலையத்தின் முனையக் கட்டடத்தைத் தாக்கியுள்ளதுடன், மற்றொரு ட்ரோன் ஷகராபாத் கிராமத்திலுள்ள பள்ளி ஒன்றிற்கு அருகாமையில் விழுந்து வெடித்துள்ளது.
இந்தத் தாக்குதல்களின் காரணமாக விமான நிலையக் கட்டடம் சேதமடைந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஈரானில் இருந்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களை அஜர்பைஜான் வெளியுறவு அமைச்சகம் வன்மையாகக் கண்டித்துள்ளது. ஈரான் தனது அண்டை நாடுகளுடன் போரில் ஈடுபட்டு வரும் நிலையில், அஸர்பைஜான் எல்லைக்குள் விழுந்துள்ள இந்த ட்ரோன்கள் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
