கொல்கத்தா: உலகக் கோப்பை டி20 முதல் அரையிறுதிப் போட்டியில் நேற்று, தென் ஆப்ரிக்காவை, 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. உலகக் கோப்பை டி20 சூப்பர் 8 சுற்றுகளுக்கு பின் நேற்று, கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் முதல் அரையிறுதிப் போட்டி நடந்தது. அதில் பலம் வாய்ந்த தென் ஆப்ரிக்கா – நியூசிலாந்து அணிகள் மோதின. முதலில் ஆடிய தென் ஆப்ரிக்காவின் துவக்க வீரர்களில் ஒருவரான குவின்டன் டிகாக், 2வது ஓவரில் 10 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரையான் ரிக்கெல்டன் ரன் எடுக்காமல் கோல் மெக்கொன்சி பந்தில் வீழ்ந்தார்.
8வது ஓவரில் கேப்டன் அய்டன் மார்க்ரம் (18 ரன்), ரச்சின் ரவீந்திரா பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். அவரைத் தொடர்ந்து 10வது ஓவரின் கடைசி பந்தில் டேவிட் மில்லர் 6 ரன்னிலும், 11வது ஓவரின் 2வது பந்தில் டெவால்ட் புரூவிஸ் 34 ரன்னிலும் அவுட்டாகி நடையை கட்டினர். அதனால், வெறும் 77 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தென் ஆப்ரிக்கா பரிதவித்தது. இருப்பினும், 6வது விக்கெட்டுக்கு இணை சேர்ந்த மார்கோ யான்சன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அதிரடியாக, 48 பந்துகளில் 73 ரன்கள் குவித்தனர். 20 ஓவரில் தென் ஆப்ரிக்கா, 8 விக்கெட் இழப்புக்கு 169 ரன் எடுத்தது.
அதையடுத்து, 170 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. துவக்க வீரர்கள் டிம் செபெர்ட் 58 ரன் விளாசி அவுட்டானார். மற்றொரு துவக்க வீரர் ஃபின் ஆலன் அட்டகாசமாக ஆடி தெ.ஆ. பந்து வீச்சை துவம்சம் செய்து ரன் வேட்டையாடினார். 33 பந்துகளை எதிர்கொண்ட அவர் 8 சிக்சர், 10 பவுண்டரிகளுடன் 100 ரன் விளாசி ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அதனால், 12.5 ஓவரில் நியூசி, ஒரு விக். இழந்து 173 ரன் குவித்து இமாலய வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
