ஈரோடு, பிப்.10: தமிழகத்தில் உள்ள 12,524 ஊராட்சிகளில் 16,508 துப்புரவு பணியாளர்கள் ரூ.2 ஆயிரம் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வந்தனர். தங்களை காலமுறை ஊதியத்திற்கு மாற்றக்கோரி அரசிடம் வலியுறுத்தி வந்தனர். கடந்த 6 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பணியாற்றி வந்த துப்புரவு தொழிலாளர்களை கடந்த மாதம் 7ம் தேதி காலமுறை ஊதியத்திற்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. இதையடுத்து, இந்த அரசாணை அனைத்து மாவட்ட கலெக்டர்கள், ஊரக வளர்ச்சி துறை இயங்குநர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், ஈரோடு மாவட்டத்தில் இந்த அரசாணைப்படி ஊதியம் வழங்கப்படவில்லை என்றும், அரசாணையை மாவட்ட நிர்வாகம் அமல்படுத்தாமல் அலட்சியப்படுத்தி வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து கிராம பஞ்சாயத்து டேங்க் ஆப்ரேட்டர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் சங்க மாநில தலைவர் சண்முகம் கூறியதாவது: கிராம ஊராட்சிகளில் கடந்த 2014ம் ஆண்டில் நியமிக்கப்பட்ட 16,508 துப்புரவு பணியாளர்களையும் சிறப்பு காலமுறை ஊதியத்திற்கு மாற்றி கடந்த மாதம் 7ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.