‘எங்கள் வயிற்றில் அடித்ததை எப்போதும் மறக்க மாட்டோம்’ என்டிஏ கூட்டணிக்கு 1 கோடி விவசாயிகள் ஆப்பு

தமிழகம் முழுவதும் சுமார் 4 கோடி விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் உள்ளனர். இதில் டெல்டா மாவட்டங்களான திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் மட்டும் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் என 1 கோடி பேர் உள்ளனர். இதில் டெல்டா மாவட்டங்கள் தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படுகிறது.

தமிழகத்தில் சட்டமன்ற பொது தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் விவசாயிகள், ஒன்றிய அரசின் மீது கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். குறிப்பாக கடந்தாண்டு அறுவடை நேரத்தில் பருவம் தவறி பெய்த மழையால் நெல் மணிகள் பாதிக்கப்பட்டது. இதனால் நெல்லின் கொள்முதல் ஈரப்பத அளவை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் ஒன்றிய அரசுக்கு தொடர்ந்து கடிதம் எழுதினார்.

அதன்படி, ஒன்றிய அரசு ஈரப்பத அளவை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க குழுவை அனுப்பியது. இக்குழு கடந்த வருடம் அக்டோபரில் டெல்டா மாவட்டங்களில் 3 குழுக்களாக பிரிந்து ஆய்வு செய்தது. அப்போது நவீன கருவி மூலம் நெல்லின் ஈரப்பத அளவை ஆய்வு செய்த ஒன்றிய குழு, நெல்லின் மாதிரிகளையும் ஆய்வுக்கு எடுத்து சென்றது. ஆய்வு தொடர்பான அறிக்கையை ஒன்றிய உணவுத்துறை அமைச்சகத்திடம் அளித்தது. ஆனாலும் ஒன்றிய அரசு, நெல்லின் ஈரப்பத அளவை உயர்த்தவில்லை. இதனால் 17 சதவீத அளவிலேயே கொள்முதல் நடந்து வருகிறது.

இதுமட்டுமல்ல… விவசாயிகளின் வருவாயை பெருக்க உற்பத்தி செலவை விட 1.5 மடங்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) வழங்கப்படும். பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும், குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்படும், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் போன்றவை விவசாயிகளுக்கு பிரதமர் மோடி அளித்த முக்கிய தேர்தல் வாக்குறுதிகளாகும். இத்திட்டங்கள் மூலம் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது மற்றும் வேளாண் சீர்திருத்தங்களை அமல்படுத்துவது அரசின் முதன்மை இலக்காக இருக்கும் என்றும் மோடி அறிவித்தார்.

ஆனால் இந்த வாக்குறுதிகளும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இதனால் டெல்டாவை சேர்ந்த விவசாயிகள் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகளும் ஒன்றிய அரசின் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். இதுகுறித்து டெல்டா மாவட்டத்தை சேர்ந்த விவசாய சங்க பிரதிநிதிகள் கூறுகையில், ‘‘நெல் ஈரப்பத அளவை ஆய்வு செய்வதற்காக ஒன்றிய அரசு குழுவை அனுப்பி வைத்தது. இதை கண்துடைப்புக்காக செய்துள்ளது.

நெல் ஈரப்பத அளவை உயர்த்தாமல் விவசாயிகள் வயிற்றில் ஒன்றிய அரசு அடித்துள்ளது. இதன்மூலம் ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். அதேபோல் வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க அதற்கான நடவடிக்கையும் ஒன்றிய அரசு இதுவரை எடுக்கவில்லை. மொத்தத்தில் விவசாயிகளை ஒன்றிய அரசு கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறது.

தேர்தல் வந்தால் மட்டும் விவசாயிகள் நினைப்பு ஒன்றிய அரசுக்கு வரும். சேற்றில் கால் வைக்கும் விவசாயிகளின் வயிற்றில் அடித்ததை எப்போதும் மறக்கவே மாட்டோம். டெல்டா மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் ஒரு கோடி பேர், வரும் சட்டமன்ற தேர்தலில் என்டிஏ கூட்டணிக்கு உரிய பதிலடி கொடுப்பார்கள்’’ என்றனர்.

Related Stories: