திருமலை: சந்திர கிரகணம் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 3ம்தேதி 10 மணி நேரம் நடை அடைக்கப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் வரும் 3ம்தேதி பிற்பகல் 3.20 மணி முதல் மாலை 6.47 மணி வரை சுமார் மூன்றரை மணி நேரம் நீடிக்கும். இதன்காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 6 மணி நேரத்திற்கு முன் நடை அடைப்பது வழக்கம். அதன்படி வரும் 3ம்தேதி காலை 9 மணி முதல் இரவு 7.30 மணி வரை ஏழுமலையான் கோயில் நடை அடைக்கப்பட்டிருக்கும். 3ம்தேதி இரவு 8.30 மணிக்கு பிறகு, கோயில் தூய்மை செய்யப்பட்டு பக்தர்கள் வழக்கம்போல் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
எனவே நாளையும், நாளை மறுதினமும் (2, 3ம்தேதிகளில்) சுவாமி தரிசனத்திற்காக திருப்பதியில் வழங்கப்படும் சர்வ தரிசனத்தில், நேர ஒதுக்கீடு செய்து வழங்கப்படும் டோக்கன்கள் இன்றும், நாளையும் வழங்கப்படாது. மீண்டும் 4ம்தேதி சுவாமி தரிசனத்திற்கான சர்வ தரிசன டோக்கன்கள் வரும் 3ம்தேதி முதல் வழக்கம்போல் வழங்கப்படும். அதேபோல், வரும் 3ம்தேதி விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாளை (2ம் தேதி) தரிசனத்திற்கான பரிந்துரை கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்று தேவஸ்தான செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 மணி நேரம் காத்திருப்பு;திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 75,428 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 36,240 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ரூ.3.56 கோடி காணிக்கை கிடைத்துள்ளது.இன்று காலை வைகுண்டம் கியூ காம்பளக்சில் உள்ள அனைத்து அறைகளும் நிரம்பியதால் பக்தர்கள் சிலாதோரணம் வரை நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இவர்கள் சுவாமியை தரிசிக்க சுமார் 24 மணி நேரமாகும். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணி நேரத்திலும் நேர ஒதுக்கீடு டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுமார் 6 மணி நேரமும் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
