ரஞ்சி கோப்பை கிரிக்கெட் வெற்றியை உறுதி செய்த ஜம்மு காஷ்மீர் அணி: 477 ரன்கள் முன்னிலை

ஹுப்பாலி: ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியின் 4ம் நாளில் ஜம்மு காஷ்மீர் அணி, 477 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டி கர்நாடகாவின் ஹுப்பாலி நகரில் கடந்த 24ம் தேதி முதல் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் ஜம்மு காஷ்மீர் 584 ரன்கள் குவித்தது. பின், முதல் இன்னிங்சை ஆடிய கர்நாடகா அணி, 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 220 ரன் எடுத்திருந்தது. இந்நிலையில் 4ம் நாளான நேற்று, கர்நாடகா முதல் இன்னிங்சை தொடர்ந்தது. சிறிது நேரத்தில் கிருதிக் கிருஷ்ணா 36, வித்யாதர் பாட்டீல் 11 ரன்னில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

2ம் நாளில் சிறப்பாக ஆடி சதம் விளாசியிருந்த மயங்க் அகர்வால், 8வது விக்கெட்டாக 160 ரன்னில் அவுட்டானார். பின் வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் வீழ்ந்ததால் கர்நாடகா 293 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஜம்மு காஷ்மீர் தரப்பில் அகிப் நபி தர் அட்டகாசமாக பந்து வீசி 54 ரன்கள் தந்து 5 விக்கெட் சாய்த்தார். அதைத் தொடர்ந்து, 2வது இன்னிங்சை ஆடிய ஜம்மு காஷ்மீர் அணியின் துவக்க வீரர் காம்ரான் இக்பால் 94 ரன்கள் விளாசி அவுட்டானர். நேற்றைய ஆட்ட நேர முடிவில் ஜம்மு காஷ்மீர் 4 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்திருந்தது. ஜம்மு காஷ்மீர் 477 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள நிலையில், கடைசி நாளான இன்று 2வது இன்னிங்சை தொடர உள்ளது. முதல் இன்னிங்சில் மெகா ஸ்கோரை எடுத்த ஜம்மு காஷ்மீர் அணி, இந்த போட்டியில் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது. கடைசி நாள் ஆட்டம் சம்பிரதாய நிகழ்வாகவே நடக்கவுள்ளது.

Related Stories: